Monday, April 8, 2013

ஆளுக்கொரு நீதியா?


1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு யாராலும் மறக்கமுடியாதது.  மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் கொடுராமாக பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆயுதங்களில், ‘ஏ.கே., 56’ மற்றும் ஒரு பிஸ்டலை நடிகர் சஞ்சய் தத் வைத்திருந்த குற்றத்திற்காக, தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த, ‘தடா’ சிறப்பு கோர்ட், 2007-ல் அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்தத் தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், தண்டனை பெற்றவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனுக்களின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர். சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏ.கே.-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த தண்டனைக் காலம், ஆறு ஆண்டிலிருந்து, ஐந்தாண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள சரியான தீர்ப்பு இது. ஆனால், சில கேடுகெட்ட அரசியல்வாதிகள், துர்புத்தி கொண்டவர்கள் மூக்கை நுழைப்பது கேவலம்.
நடிகர் சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம் என, பாலிவுட் நட்சத்திரங்களும், சில அரசியல் கட்சி பிரபலங்களும், பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவும் கச்சை கட்டி நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. ஆனால், சஞ்சய் தத்தோ, ‘நான் மன்னிப்பு கோரப் போவது இல்லை’ என, தெரிவித்திருக்கிறார். அவர் செய்த தேச துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கவே அவருக்கு அருகதை கிடையாது என்பதுதான் உண்மை. 
பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கருணை காட்டச் சொல்லும் மகாபுருஷர்களை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனை, நடத்த காரணமானவனை தூக்கில் போட வேண்டாம் என்பார்கள்; கடல் வழியாக மும்பையில் நுழைந்து பொதுமக்களை சுட்டுக் கொன்றவனை தண்டித்தால் எதிர்ப்பார்கள். அரசியல் பலம், பண பலம், சினிமா புகழ் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் அவன் எவ்வளவு பெரிய தேசதுரோகியாக இருந்தாலும், தேசதுரோகத்தில் ஈடுபட்டாலும் அதை மறந்து துதி பாட காத்துக் கிடக்கும் ஒரு கூட்டத்தை இங்குதான் பார்க்க முடியும். 
நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, தனி நபர்களும், சில அமைப்புகளும், மகாராஷ்டிரா கவர்னர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்துள்ளனர். அதே போல், மன்னிப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சில தனி நபர்களும், அமைப்புகளும் மனு அளித்துள்ளன.
இந்த வகையில், மகாராஷ்டிரா கவர்னருக்கு, 60 மனுக்கள் வந்துள்ளன. இதில், 25 மனுக்கள், சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன. இவ்வாறு மனுக்கள் அளித்தவர்களில், பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜ், சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர்சிங், நடிகையும், எம்.பி.-யுமான ஜெயப்பிரதா, ஆகியோரும் உள்ளனர்.
வயிற்றுப் பசிக்கு, இல்லாத கொடுமைக்கு திருடுபவனும் சூழ்நிலைக் காரணமாக குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்களுக்கும் சட்டம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை.  பெரிய பெரிய தேச துரோகிகள் சிலரால் தியாகிகளாகக் கூட கற்பிக்கப்படுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கையில், ‘என்ன தேசமோ இது என்ன தேசமோ... இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ, நீதி வெல்லுமோ... நேரமாகுமோ’ என்ற பாடல்தான்  நினைவுக்கு வருகிறது. ஆனால் ஏப்ரல் 18-ல் சஞ்சய் சரணடையவுள்ளதாக சொல்லியிருப்பது கூடுதல் செய்தி.