Friday, January 25, 2013

முடிந்தது புத்தகத் திருவிழா


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், அண்ணா சாலை காயிதேமில்லத் கல்லூரியில் சிறிய எண்ணிக்கையில் அரங்குகளை அமைத்து, கண்காட்சியைத் தொடங்கி நடத்தியது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அரங்குகளின் எண்ணிக்கை கூடியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் கடந்த ஆண்டு வரை (2012) கண்காட்சியை நடத்தியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நடக்கும் வேலைகளினால், இந்த ஆண்டு எங்கே நடத்துவது என சிக்கலில் இருந்தது. ஒருவழியாக முடிவு செய்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு,  அங்கு 36 வது புத்தகக் கண்காட்சி 11.1.2013 மாலை தொடங்கி 23.1.2013 வரை கோலாகலமாக நடந்து முடிந்தது.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சிவபதி, மேயர் துரைசாமி ஆகியோர் புத்தக காட்சியை தொடங்கி வைத்தனர். முதல்நாள் துவக்க விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தாளர்களுக்கு பபாசி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த புத்தக காட்சியில் சுமார் 60 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் அளவில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. வாசகர்களின் வருகை 10 லட்சத்துக்கும் மேல் இருந்துள்ளது. எப்போதும் போல் வெளி ஊர்களில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட படிப்பாளர்களும், படைப்பாளர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், விஜயம் செய்தனர். ஆனால், சில நாட்கள் சில அரங்குகளில் டல்லடித்த சம்பவமும் நடந்தது. எப்படியோ ஒருவழியாக புத்தகத் திருவிழா நல்லபடியாக முடிந்துவிட்டது. ஒரு சில அசௌகரியங்கள் இந்தப் புது இடத்தில் இருந்தது. அந்த அசௌகரியங்களும் களையப்பட்டிருந்தால் இன்னும் கோலாகலமாக இருந்திருக்கும் இந்த 36வது புத்தகக் காட்சி. இதன் மூலம் ஒன்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. லேப்டாப், செல்போன்களெல்லாம்  படிப்பதற்கான சகல வசதிகளைக் கொடுத்தபோதும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணம் குறையவில்லை. இது குறையாத வரை புத்தக பதிப்பாளர்களின் காட்டில் மழைதான்.

Wednesday, January 23, 2013

தேசத் துரோகம்!



(தினமணி தலையங்கம் - 22.01.2013 )

எதிர்க்கட்சியை ஆளும் கட்சியும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சியும் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால், அத்தகைய குறைகாணும் வழக்கம் வரம்பு மீறுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தரம் தாழ்வதும் ஏற்புடையதல்ல.

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாரதிய ஜனதா கட்சியும், அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்துத்  தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரு அமைப்புகளின்  தீவிரவாத நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது'' என்று கூறியிருக்கிறார்.
 அதுமட்டுமல்ல, "சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சில குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது' என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாதில் மெக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் நகரில் மசூதி ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும், அவர்கள் செய்த "இந்தக் குற்றத்துக்கு சிறுபான்மையினர் மீது பழி போடுகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார். நாட்டின் உள்துறை அமைச்சர் கூறும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால், இந்நேரம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு மோசமான தீவிரவாதம் இந்த தேசத்தில் வளர்க்கப்படுகிறது என்றால் செயல்பட வேண்டிய மத்திய அரசு, ஏன் வெறுமனே சிந்தனை முகாமில் இதைப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் துறவி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் இதுபற்றி நாம் யாராவது எழுதினாலோ, பேசினாலோகூட நீதிமன்ற அவமரியாதை எனும்போது, ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியாவில் நிலவிய பதற்றமான நிலை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருந்தது. இந்தியா- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டன. சண்டைநிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இந்திய எல்லையில் துப்பாக்கிக் குண்டுமாரி பொழிந்தது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், நடமாட்டம் இருக்கிறது என்று இந்தியா சொன்னதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு கார்கில் போர் மூளுமோ என்ற அச்சம் நிலவியது. அந்த நிலைமை சற்று தணிந்திருக்கும் இவ்வேளையில், இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும், குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத் தீவிரவாதிகள்தான் என்றும் ஒரு உள்துறை அமைச்சரே பேசினால், பாகிஸ்தானுக்கு எத்தகைய கொண்டாட்டமான விஷயம் அது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்றுதான் இந்திய அரசு கூறி வருகிறதே தவிர, முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்று தவறிக்கூடக் கூறியதில்லை. இந்தியப் பத்திரிகைகளும்கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர, அவர்களது பெயரைக்கொண்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை. தீவிரவாதிகள் மனிதகுலத்துக்குப் பேரழிவு நாடுபவர்கள் என்பதால்தான் அவர்களை நாம் எதனோடும் அடையாளப்படுத்துவதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம். நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என். வேலு, உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படக் காரணம், நீதியில் அரசியல் கூடாது என்பதற்காக! மனத்தீ வளர்க்கும் வார்த்தைகளைப் பேசிய ஆந்திர மாநில எம்எல்ஏ அக்பரூதீன் ஓவைஸியை, ஹைதராபாத் போலீஸ் கைது செய்யக் காரணம், மானுடநெறியில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக! இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? உங்கள் உள்துறை அமைச்சரே கூறுகிறார் ஹிந்துத் தீவிரவாதிகள் முகாம்களில் தயாரானதாக என்று பாகிஸ்தான் பதிலடி கொடுக்காதா? இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்..! ஓட்டுக்காக நாட்டை பலி கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது?

அற்புதமான தலையங்கம்!

Tuesday, January 15, 2013

தேசப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்!

வீரத் துறவி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில், எல்லையைக் கடந்து சீண்டிப் பார்த்திருக்கிறது பாகிஸ்தான். அன்னிய மண்ணில் பாதம் பதித்து நம் தேசத்தின் பெருமைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்த விவேகானந்தர் பிறந்த பூமியில் அன்னியர் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளது வேதனைக்குரியது.
கடந்த 8.1.2013-ல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதோடு இரண்டு இந்திய வீரர்களை கொன்று, ஒரு வீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் வெறிச் செயலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். இந்த மிருகத்தனமான செயலுக்கு தகுந்த பாடத்தை மத்திய அரசு புகட்டவேண்டும் என்பதே மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு. இந்தச் சூழ்நிலையில் நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஹினாரப்பானி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தானியர்கள் அத்து மீறி எதுவேண்டுமானாலும் செய்வார்களாம், இந்திய ராணுவத் தளபதியோ, அரசியல் தலைவர்களோ அதுபற்றி பேசினால் அது பாகிஸ்தான் மீது பகைமை உணர்வை தூண்டுவதாக உள்ளதாம். கார்கில் போரில் கொடுக்கப்பட்டதை விட பெரிய அடி பாகிஸ்தானுக்கு கொடுத்தால்தான் வாலை சுருட்டுவார்களோ என்னவோ. பாகிஸ்தானின் வெறிச் செயலுக்கு இந்திய ராணுவத் தளபதி கண்டித்து பேசினார், பா.ஜ. தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மிகவும் யோசித்து தயங்கி தயங்கி கண்டித்து இருப்பது வேதனைக்குரியது. வேறு நாடுகளாக இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை கதிகலங்கச் செய்திருப்பார்கள். நம்மைப் போல் நாள் நட்சத்திரம் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவை ஆள்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பில் அக்கரையற்றவர்களாக இருந்தால், ஆட்சி ஆள்வதற்கு தகுதியற்ற அவர்களை மக்கள் தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

Tuesday, January 8, 2013

நிதர்சனமான உண்மை!

அன்று இந்தியாவில் இருந்து சென்று சகோதர சகோதரிகளே என்று சிகாகோவில் சொற்பழிவாற்றி, உலகையே தன்பக்கம் ஈர்த்தார் விவேகானந்தர். இன்று அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து இந்து சமயத்தின் பெருமையை பகவத் கீதையை பதவியேற்க சாட்சியமாக்கி உலகையே தன்வசம் திரும்பச் செய்திருக்கிறார் ஒருவர். ஆம், அமெரிக்காவின், ஹவாய் பகுதியைச் சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, எம்.பி&யாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த 2012&ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு (31), பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், எம்.பி&க்களாக பதவி ஏற்றனர்.
துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, உறுதி மொழி ஏற்றுள்ளார்.
இதுகுறித்து துளசி கூறியதாவது: “பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால்தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.” நிதர்சனமான உண்மையை, நித்தியமான பெருமையை உணர்வுபூர்வமாக உலக அரங்கில் உறுதிமொழியாக உணர்த்தியிருக்கின்றார் துளசி கபார்டு.

Friday, January 4, 2013

பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்!


டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையிலும் அந்தக் குற்றத்துக்கான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்கவே மக்கள் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இது வெக்கக் கேடான விஷயம். போஃபஸ் ஊழல், மாட்டுத் தீவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலை வழக்குகள் ஆகியவற்றில் சர்வசாதாரணமாக தப்பித்துக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு போனஸ் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது வரம்பு எது என்று சொல்லியிருப்பதுதான் அது.டெல்லி மாணவி பலாத்காரத்தைத் தொடர்ந்து பல வித விவாதங்களும் வழக்குகளும் மக்களால், பொதுநலச் சிந்தனையாளர்களால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கும் கருத்து சில அரசியல்வாதிகளுக்கு உச்சி குளிரச் செய்திருக்கும். பலாத்கார குற்றங்களில் தொடர்புள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். பிட்பாக்கெட் அடிப்பவனையும், பசிக் கொடுமையால் திருடுபவனையும் தண்டிக்கும் சட்டம் பதவியில் இருக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி தண்டித்தால்தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை சாகாமல் இருக்கும். கழுவுகிற மீனில் நழுவிடாமல் சட்டம் தன் கடமையை செய்திட வேண்டும். சட்டம் உண்மையிலேயே இருட்டறை ஆகிவிடக் கூடாது.