Sunday, November 2, 2008

மனித சங்கிலி மாற்றம் தருமா?


இலங்கை தமிழர்களை இனவெறிகொண்டு சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் தமிழனாய் பிறந்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தி அதிலும் பேறும் புகழும் சேர வேண்டும், வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற சுயநலவாதிகளின் நாடகம்தான் வேதனை அளிக்கிறது. பிறந்த நாள் என்றாலோ, பாராட்டு கூட்டம் என்றாலோ, மாநாடு என்றாலோ தமிழே, தமிழகமே, தமிழினத் தலைவரே, செந்தமிழே, செம்மொழியே என்றெல்லாம் போஸ்டர்கள் அல்லோலகல்லோலப் படுகிறது. ஆட்சி அதிகாரமும் கையில் இருக்கிறது. மத்திய அரசை தட்டிக்கேட்க தேவையான நாற்பது மத்திய மந்திரிகளும் உள்ளனர். அப்படி இருக்க எதற்காக 'இந்திய அரசே! வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற வசனங்களுடன் போஸ்டர்களும், மனித சங்கிலி போராட்டமும். அதனால் எந்த பலனாவது இருக்கிறதா? ஒன்றிரண்டுபேர் வாய் துடுக்காக பேசி தங்களை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டதை தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. அன்றைய ஒருநாள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தமிழக மக்கள் அவஸ்தை பட்டதுதான் மிச்சம். தமது மகள் மகன் உட்பட கட்சிக்காரர்களை மத்திய மந்திரிகளாக்கி தேவையான இலாக்காக்களை மிரட்டி வாங்க டெல்லிக்கு ஓடும்போது இருந்த மனநிலை இப்போதும் வரவேண்டுமே!அவரல்லவோ தமிழினத் தலைவர். இலங்கை தமிழர் பிரச்னைக்குமட்டும் மக்கள் லட்சக்கணக்கில் பிரதமருக்கு கடிதங்கள் எழுத வேண்டுமாம். இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி தருவதை தடை செய்யவும், தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தலாமே! 'தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாவேன். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம். நான் கவிழ்ந்துவிடமாட்டேன்' என்று சொன்னால் போதாது செயலும் இருக்கவேண்டும். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாப்பஸ் பெறுவோம் என்று கூறி நாடகத்தை அறங்கேற்றிய கையோடு அடுத்து வசூலில் இறங்கிவிட்டது வேதனையாக உள்ளது. சூனாமி வசூல்கூட பலபேரை பணக்காரர்களாக்கியது.இதுவும் அப்படி ஆகிவிடாமல் இருந்தால் சந்தோஷம். இலங்கை தமிழர்கள் குற்றுயிரும் குறையுயிருமாக ரத்தவெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் வடித்தால் போதுமா? எஞ்சி இருப்போரை காப்பாற்ற அது எந்தவிதத்திலும் உதவாது. தமிழகத்தில் எத்தனை கிலோமீட்டருக்கு மனித சங்கிலி கோத்தாலும் எந்த மாற்றத்தையும் காண முடியாது. இது ஒரு பம்மாத்து வேலையே. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முடிவெடுத்து செயல்படுத்த முனைவதே சரியான செயலாகும். மத்திய அரசின் மழுப்பல்களுக்கு செவிசாய்த்தது தமிழினத்துக்கு செய்த பச்சை துரோகமாகும். கொன்று குவிக்கப்படும் தமிழர்களின் அவல நிலையை அரசியலாக்கி ஆதாயம் தேடி அசிங்கப்படுத்திவிடாதீர்கள்.பேரணிகள் ஆர்ப்பாட்டங்களைவிட அதிகாரம் சக்திவாய்ந்தது பொதுநலத்துக்கும், மக்கள் நலனுக்காகவும்கூட பயன்படுத்தினால் கட்டாயம் இலங்கை தமிழர்களுக்கு நிம்மதியை தரமுடியும்.


Friday, October 24, 2008

கவலை வேண்டாம் கைதிகளே....

நீங்கள் கொலை கொள்ளை செய்துவிட்டு சிறையில் உள்ளவரா? ஆள்கடத்தல், போதைபொருள் கடத்தல், பச்சிலம் குழந்தைகளையும் கன்னியரையும் கற்பழித்து கைதானவரா? கவலையை விடுங்கள் கூடிய விரைவில் உங்களுக்கும் விடுதலை கிடைத்துவிடும். தனது தற்போதய ஆட்சிக்காலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளியோரை விடவும் சிறையில் வாடும் சமுதாய (குண்டர்கள்) தொண்டர்களிடம்தான் நம் தலைவர் இரண்டுமுறை கருணையை காட்டியுள்ளார். அதுவும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகத்தான் எப்படியும் அடுத்த மாதமோ அதற்கடுத்த மாதமோ ஏதாவது ஒரு தலைவரின் பிறந்தநாளோ நினைவுநாளோ வராமல் போகாது. அப்போது சிறையில் உள்ள மற்றவர்களும் வெளியில் வந்து விடலாம். ஆனால் அதற்குள் அவசரப்பட்டு கோவையை சுடுகாடாக்கியவர்களாக கூறப்படுவோர் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்ட்டர்களை ஒட்டிவிட்டனர். ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு தொடர்பான கைதிகள் பாதிபேர் விடுதலையாகி விட்டனர். அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக இருந்தால் எப்படியும் மகன் மகள், பேரன் பேத்தி பிறந்தநாளாவது கொண்டாடப்படும்போது விடுதலையாகிவிடலாம் அல்லவா? இந்தியாவின் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்றவர்களிடமே கருணையை பொழியும் தலைவர், சாதாரணமான மக்கள் அறுபது பேரை கொன்றவர்களிடம் கருணை காட்டாமல் இருந்துவிடுவாரா என்ன? கொஞ்சம் பொருமையாய் இருங்கள். அண்ணா நூற்றாண்டு விழாவில் விடுதலையாகிவந்த, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கொலை வழக்கிலும், தா. கிருஷ்ணன் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் வெளியே வந்த தும் வராததுமாக நான்கு நாட்களிலேயே தனது சமூக சேவையை (வெட்டு, குத்து) தொடங்கி விட்டார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தோழர்கள் மீதும், எதிர் கட்சியினர் மீதும் ஆயுதங்களை பிரயோகித்துப் பார்த்து விட்டனர். ஏற்கனவே கொலை கொள்ளை தலை விரித்தாடுகிறது.கோயில் உண்டியலைக்கூட காவலாளிகளை கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்கின்றனர். போதாக்குறைக்கு 1405 சிறைக் கைதிகளை அண்ணாவின் நூற்றாண்டு விழாவை காரணம் காட்டி வெளியே விட்டிருக்கிறார்கள். மதுரை வாரிசு மனம் மகிழவே இந்த கைதிகள் விடுதலை என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. மதுரையில் தனி ராஜ்யமே நடப்பது ஜனநாயகத்துக்கு சவக்குழி வெட்டியாகிவிட்டதையே உணர்த்துகிறது. சொந்த பந்தத்தையே கண்ணில் விரலை விட்டு ஆட்டும்போது, (கேபிள் டி.வி உலகில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சன் நிர்வாகத்தையே படாதபாடு படுத்தும்போது) சாதாரண மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. ஆகமொத்தத்தில் அதிகார வர்க்கத்தின் ஆணவ ஆட்டம் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. எது எப்படியோ மக்களுக்கு நீதித்துறை மீதும் காவல்துறை மீதும் கொஞ்சமாவது நம்பிக்கை இருந்திருக்கும் அந்த கொஞ்ச நம்பிக்கையும்கூட இனி இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

Wednesday, October 22, 2008

உழைப்பாளி


உதிரத் துளிகளை உழைப்பாலே
வியர்வையாய் சிந்துபவன்
பகிர்ந்துண்டு வாழ பழகியவன்
இரந்துண்டு வாழத் தெரியாதவன்
நாடி நரம்புகள் மட்டுமல்ல...
உள்ளத்திலும் உறுதி படைத்தவன்
அண்டியோர் வயிறு நிறைய...
அடிமாடாய் தேய்பவன்
மெழுகாய் உறுகி ஒளியாய் மாறுபவன்
வறுமைக்கோட்டின் நிறந்தர வாரிசு அவன்.

Wednesday, September 17, 2008

பாமரனின் பஞ்சப்பாட்டு



பாமரனின் பஞ்சப்பாட்டு


வெலவாசி எகிறிப்போச்சு வெஷம்போல ஏறிப்போச்சு பெட்ரோலும் டீசலும் கெடைக்கறதில்ல பவர்கட்டும் ஓயவில்ல நெலமெல்லாம் காஞ்சிப்போச்சு வெவசாயிங்க வாழ்க்கையும் மாஞ்ஜிப்போச்சு வண்டி ஓட்டவும் முடியல வாழ்க்கை நடத்தவும் வழியில்ல பரம்பற சொத்து எதுவுமில்ல பேங்குல பேலன்ஸ்கூட இல்ல பதுக்கல்காரன் பதுக்கியத... வீணாப்போன பின்னால பாதி வெலக்கி வித்ததாட்டும்... ஏழபாழ எங்களுக்கு... புழுத்துப்போன அரிசியெல்லாம்... தலைவா! நீ ஒரு ரூபாவுக்குப் போட்டுபுட்டா போதுமா? நாய்கூட சீண்டாத கூப்பன் அரிசி அது எங்க வாழ்கைக்கான அரிசியா? வாய்க்கரிசியா? அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடலாம் அத்தியாவசிய பொருளுக்காக மக்கள் திண்டாடலாமா? கவர்ச்சித் திட்டங்கள நிறுத்துங்கய்யா கவனத்த மக்கள் நலனுல திருப்புங்கய்யா.


Monday, September 15, 2008



இந்தியாவின் தோல்வி காங்கிரஸின் வெற்றி


உலக அரங்கில் பாரதம் ஜனநாயக நாடாக இன்று தெரிந்தாலும், இங்கு நடப்பது மன்னராட்சிதான். என்ன நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தனது கைத்தடிகளை பிரதம மந்திரி பதவியில் அமர வைத்து ஆட்சிக்கட்டிலை நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. நமது தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டிருந்தபோது சுதந்திர காற்றை சுவாசிக்க செயல்பட்ட இயக்கங்களும் தலைவர்களும் ஏராளம். நாட்டின் விடுதலைக்காக உடமைகளையும்,உயிரையும் இழந்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட இயக்கங்களுள் ஒன்று காங்கிரஸ், இன்றுள்ள காங்கிரசுக்கு நேர்மாறானது அன்று காந்தியடிகள் வழிநடத்திய காங்கிரஸ். அன்று தேச மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் விடுதலைக்காகவும் காங்கிரஸ் இயங்கியது. இன்று பதவி மோகத்துக்காகவும், சுயநல நோக்கத்துக்காகவுமே காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதனை குறிப்பாக தற்போதைய மத்திய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம்,அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் அதிகமாகிக்கொண்டு வருவது, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம்,விவசாயிகளின் தொடர் தற்கொலை அவலம், இவ்வளவு சிக்கல்களையும் வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட, இந்தியாவின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் ஆட்சி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் எப்படிப்பட்ட விலைவுகளை உண்டுபண்ணும் என்பதை கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மன்மோகன்சிங் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியாவை அமெரிக்காவுக்கு அடமானம் வைக்க, கோடான கோடி மக்களின் வாழ்வை இருட்டடைய செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அமெரிக்காவின் விகார முகத்தை நாம் போகப்போகத்தான் பார்க்கப்போகிறோம். பொருளாதார மேதை, பெரிய அறிஞர் என்றெல்லாம் உயர்வாக எண்ணி இந்திய மக்கள் பிரதமராக ஏற்றுக்கொண்ட மன்மோகன்சிங், அவர்களின் உணர்வுகளை காலில்போட்டு நசுக்கிவிட்டார். விலைகொடுத்து எம்.பி.க்களை வாங்கி பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. நாட்டின் நலனைப்பற்றி கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக செயல்படுபவராகவும், சோனியாவின் சொல்லுக்கு பம்பரமாக சுழலும் தலையாட்டி பொம்மையாகவும் உள்ளார் மன்மோகன்சிங். கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிட்டார் மன்மோகன்சிங். பேரம் பேசப்பட்டு கோடிக்கணக்கான பணத்தினால் எம்.பி.க்களை விலைக்கு வாங்கி மன்மோகன் அரசு வெற்றி பெற்றது கண்டிக்கதக்கது என்ற கம்யூனிஸ்டு மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உலக அரங்கில் இந்தியாவை வெட்க்கித் தலைகுனிய வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் மன்மோகன்சிங்குக்கும் வேண்டுமானால் இது மகத்தான வெற்றியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவும் இந்திய மக்களும் நல்ல தலைமையை, நாட்டின் நலன் கருதும் உத்தமமான தலைவரை தேர்ந்தெடுப்பதில் மாபெரும் தோல்வியடைந்துவிட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.பாகிஸ்தானில் தனது தாக்குதலை அத்துமீறி துவங்கியுள்ள அமெரிக்கப் படை, அணுசக்தி ஒப்பந்தம் என்ற அடிமைசாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டால் பிறகு இந்தியாவிலும் தனது அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.பொறுப்பற்ற,திறமையற்ற,தைரியமற்ற தலைமையை தவறாக தேர்ந்தெடுப்பவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்களைதான் இந்திய மக்களும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, September 12, 2008



தமிழக மக்கள் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்


பாவம் தமிழக மக்கள். அவர்கள் படும் கஷ்ட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ‘மேடை ஏறி பேசும்போது ஆறு போல பேச்சு கீழ இறங்கி வந்ததுமே சொன்னதெல்லாம் போச்சுஆசை வார்த்த காட்டு உனக்கும் கூட ஓட்டுசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது’ என்ற சந்திரபாபுவின் பாடல் வரிகள் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ள சூழலுக்கு பொருந்தும் அருமையான பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளில் வரும் சிரிப்பு இதயத்தின் ரணத்தால் வரக்கூடியது. ஆம், இன்றும் அரசியல்வாதிகள் நம் மக்களை ஏய்த்து பிழைப்பதும்,கோடி கோடியாக கொள்ளையடித்து சொகுசுக் காரில் ஊர்சுற்றி உள்ளாச பேர்வழிகளாக வாழ்கிறார்கள்.தேர்தலுக்கு முன் உங்கள் காலுக்கு செருப்பாவேன்,கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் உங்கள் வீட்டு சேவகனாவேன்,நான் தேர்தலில் வெற்றி பெற்றால் உங்கள் வீடுகளில் தேனாறும் பாலாறும் பாயும் என்று வாய் கிழிய வாக்குறுதி வாரி வீசுவார்கள்.ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னால் எந்த திட்டத்தில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்.யாரை மிரட்டி எவ்வளவு கொள்ளை அடிக்கலாம்.சட்ட விரோதமாக மடக்கிப்போட எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்ற எண்ணத்தோடே தினமும் விடிந்து மறையும். மக்கள் குறைகள், கஷ்ட நஷ்டங்களுக்கான தீர்வுகளும், உதவிகளும்,அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் கானல் நீராகிவிடும். இவ்வளவும் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.தமிழக மக்கள் ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அனுபவித்துக் கொண்டு வாய் மூடி மௌனிகளாக, அடிமாடுகளைப்போல் எதிர்த்து போராட திரானியற்றவர்களாக உள்ளனர்.இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்குகிறோம், நகரங்களுள் சென்னையை சிங்கார சென்னை ஆக்குகிறோம் என்றவர்கள் ஆதாயம் அதிகம் கிடைக்கும் பாலங்கள் அமைப்பதில் காட்டும் முனைப்பை அன்றாடம் மக்கள் படும் அவதிகளில் காட்டாதது வேதனைக்குரியது.ஒருவேளை பாலங்களால் போக்குவரத்து வேண்டுமானால் சீர்படலாம், மக்கள் பயணிக்க பேருந்து வசதி வேண்டுமே.அவ்வப்போது ஆயிரம்,இரண்டாயிரம் பேருந்துகள் புதிதாக விடுவதாக செய்திகள் வருகின்றன.உண்மையில் செய்திகள் மட்டுமே வருகின்றன. ஆனால் இன்னமும் மக்கள் தினமும் நரக அவஸ்த்தை பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டை உடைந்த பேருந்துகளில் தொங்கிக்கொண்டுதான் பயணிக்கிறார்கள் உயிரை எமனுக்கு சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு.அப்படியே நல்ல புதிய பேருந்து வந்தால், அது மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் சம்பாதியத்தை சொற்ப நாளில் ஏப்பம் விடும் அளவுக்கு உயர்ந்த கட்டணம் கொண்டதாக உள்ளது. அவசரத்துக்கு வேறு வழி இல்லாமல் ஏறிவிட்டால், பெயர் மட்டுமே டீலக்ஸ், நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டுவிடும். இங்கும் அங்குமாக இரண்டு பொந்துகள் மட்டுமே பேருந்தின் கூறையில் உள்ளது, பேருந்து முழுக்க கண்ணாடியால் அடைக்கப்பட்டு, மக்களும் வெற்றிலை கட்டுகளாக, லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் அடிமாடுகளைப்போல் அடைக்கப்பட்டு, மூச்சுக்காற்று முட்டும் நிலையில் பயணிக்க வேண்டி உள்ளது.இதில் இன்னொரு அபத்தம் என்னவென்றால், எம். சர்வீஸ் என்று ஒன்று உள்ளது. வெள்ளை போர்டில் எண்ணுக்கு முன் எம். போடப் பட்டிருக்கும். அப்படி இருந்தால் அந்த பேருந்தில் பயணிக்க சாதாரண பேருந்தைவிட பயணக் கட்டணம் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். அது விரைவுப் பேருந்தும் கிடையாது. அதேசமயம் அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுதான் செல்லும்.இதைவிட மட்டமாக எந்த அரசும் தமிழக மக்களை ஏமாற்றியிருக்க முடியாது.இன்னொரு மோசடி என்ன தெரியுமா? சாதாரண பஸ்ஸின் கண்ணாடியில் டீலக்ஸ் என்ற ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு கிண்டியில் இருந்து டி.வி.எஸ் வரை செல்வதற்கு ஏழு ரூபாய் வாங்கப்படுகிறது.சாதாரண பேருந்தில் மூன்று ரூபாய் ஐம்பது பைசாதான் பயணக் கட்டணம். இவ்வளவு மோசடிகளையும் மனதில் சுமந்துகொண்டும், முண்டியடித்துக்கொண்டும்,நெறுக்கிக் கொண்டும் பயணித்து, இறங்கவேண்டிய இடம் வந்ததும் கீழே இறங்கும்போது, மடிப்பு களையாமல் போட்டு வரும் சட்டை பேன்டுகள் பல மடிப்புகளோடு கசங்கி கண்றாவி ஆகிவிடும்.மாநகர பேருந்துகளில் மக்களிடம் பறிக்கப்படும் வருமானம் போதாதென்று விளம்பரப்பலகைகளின் மூலமாக வேறு வருமானம் குவிகிறது.ஆனால்,கணக்கு என்று வந்துவிட்டால் நஷ்டக்கணக்குதான் காட்டப்படும். மாநகர பேருந்தின் நிலை இப்படி என்றால், வெளி ஊர் செல்லும் பேருந்துகளிலும் இதே நிலைதான். அதிலும் குறிப்பாக வாரக் கடைசி நாட்களான வெள்ளி, சனிக் கிழமைகளில் ஊருக்கு போகலாம்,சொந்தபந்தங்களை பார்க்கலாம் என்று நினைத்தால்,பேருந்துகள் நிறம்பி வழிந்து மக்கள் இங்கும் அங்குமாக பஸ் கிடைக்காமல் அலைவது,பேருந்து நிலையத்திலேயே படுத்துக் கிடப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.போதாக்குறைக்கு மின்சார தட்டுப்பாடும், டீசல் தட்டுப்பாடும், அதனால் அனைத்துப் பொருட்களின் விலை விஷம் போல் உயர்ந்து மக்களின் வாழ்வே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் நம் காலுக்கு செருப்பாகிறேன், உங்கள் வீட்டு சேவகனாக இருப்பேன்,பாலாறும் தேனாறும் ஓடவிடுவேன் என்று வார்த்தைகளை வாரிவிட்ட அரசியல்வாதிகளோ இதைபற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல், மனிதாபிமான அடிப்படையில் கூட மக்களின் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், கொட்டுகின்ற லஞ்சப் பணத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். தினுசு தினுசான கார்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஸ்டார் ஹோட்டல்களில் கும்மாளம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆடம்பர விழாக்களும், விளையாட்டு போட்டிகளும், டாம்பீக வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.மக்களின் வரிப் பணத்தில் வாரிசுகளை பெருமைபடுத்த விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்து தவறாமல் வாக்குரிமையை நிலைநாட்டி வாழ்வுரிமைகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம்.உண்மையில் தமிழகத்தில் வாழ்பவர்கள் மக்களா? அல்லது மாக்களா? பாவம் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்.

பான்பராக் பைத்தியங்கள்


பான்பராக் பைத்தியங்கள்


வயதானவர்கள் அசைபோட்டுக் கொண்டே இருப்பதை நாம் நமது வீடுகளிலும் வெளிவட்டாரங்களிலும் கட்டாயம் பார்த்திருப்போம். வெற்றிலை பாக்கு போடுவதென்பது டீ,காபி குடிப்பது போன்ற பழக்கங்களில் ஒன்றாக நமது முன்னோர்களிடம் அன்றைய நாட்களில் இருந்த ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.வெற்றிலை பாக்கை சிலர் மெல்ல முடியாவிட்டால், அதற்காக சிறிய இரும்பால் ஆன உரலையும் அதற்கு தக்க உலக்கையையும் வைத்து இடித்து, தூளாக்கி வாயில் போட்டு மென்றுகொண்டு வீட்டு திண்ணைகளில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் கூட இன்றைய இளைஞர்களைபோல அசைபோட்டிருக்க முடியாது. இவர்களைப்போல சுற்றுப்புறங்களை நாசமாக்கி இருக்கவும் முடியாது. வயதானவர்களில் சிலர் வெற்றிலை பாக்கை மென்று அந்த எச்சிலை துப்ப ஒரு பழைய டப்பாவில் மணலைகொட்டி, அதில் எச்சிலை உமிழ்ந்து ஒரு ஓரமாக கொட்டிவிடுவார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் தொற்று நோய்போல் பரவும் சிகரெட் பிடிப்பது,மது அருந்துவது,பீடா என்ற வரிசையில் பிரசித்தமானது, போதை மற்றும் வாய் புற்றுநோயையே உருவாக்ககூடிய மோசமான பான்பராக் பழக்கம்.ஒரு நாளைக்கு பத்துக்கும் மேலான பாக்கெட்டுகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் மிஷின்களாக நிறைய இளைஞர்கள் உள்ளனர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகும் இளைஞர்கள் அதன் விபரீதத்தை அறியாமல் சரம் சரமாக மென்று தள்ளுகிறார்கள்.பணத்தை செலவழித்து அவர்களின் உடல் நிலையையும் நாசமாக்கிக்கொண்டு சுற்றுப்புறத்தையும் சீரழித்துவிடுகிறார்கள். ரயில் நிலையங்களின் தரைகளையும்,சுரங்க நடைபாதை சுவர்களையும், படிக்கட்டுகளையும்,பேருந்துகளையும் நாரடித்துவிடுகிறார்கள். ஏன்! சில சமயங்களில் ஆட்கள்மீதே துப்பி சிக்கலுக்கு உள்ளாவதும் உண்டு. சமீபத்தில் நங்கநல்லூரில் இருந்து உயர் நீதிமன்றம் வரை செல்லும் ஑52பி ஒ மாநகரப்பேருந்தில் நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு முன் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த ஒரு டிப்டாப் வாலிபர் வாயை அசைபோட்டுக்கொண்டே வந்தார். பேருந்து கிண்டி வருவதற்குள்ளாக பல முறை எச்சிலை ஜன்னல் பக்கமாக துப்பிக்கொண்டே வந்தார். அதிலும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது துப்பினால் காற்றில் பறந்து பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் மீது படுமே என்ற சாதாரண விஷயத்தை கூட பொருட்படுத்தாமல் துப்பிக்கொண்டே வந்தார். நான் சொல்லிப்பார்த்தேன் அவர் கேட்பதாக தெரியவில்லை. பேருந்து சைத்தாப்பேட்டை வந்தபோது மீண்டும் தலையை நீட்டி எச்சிலை துப்பினார். பாவம் பேருந்தின் பக்கத்தில் டூ&வீலரில் வந்த ஒருவரின் அழகான வெள்ளை வெளேர் சட்டையை நாசமாக்கிவிட்டார். டூவீலரில் வந்தவர் எக்கச்சக்கமான கோபத்தில் வாயில் வந்தபடி அவரை திட்டியதோடு, டூவீலரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாகவே எம்பி எச்சில் துப்பிய வாலிபரை கண்ணத்தில் இரண்டு அடியும் கொடுத்தார். வாலிபர் மன்னிப்புக் கேட்டும் டூ&வீலர்காரரின் கோபத்தில் இருந்து தப்ப முடியவில்லை.பேருந்தில் அதுவரை வேடிக்கை பார்த்தவர்களின் வசைமழைக்கும் தப்ப முடியவில்லை. பெரியவர்கள் சொல்லுவார்கள், ''ஒன்று சொல்புத்தி வேண்டும் அல்லது சுயபுத்தி வேண்டும்'' என்று. சொல்லியும் கேட்கவில்லை, சுயமாகவும் யோசிக்கவில்லை அந்த பான்பராக் இளைஞர் அதன் விலைவுதான் கண்ணத்தில் விழுந்த அடி.பான்பராக் பைத்தியம் படுத்தும்பாடு அசௌகரியத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தை நாசமாக்கும் நாசகார சக்தியாகவும் உள்ளது.இந்த பொழுதுபோக்காக ஆரம்பித்த பழக்கம் முடிவில் நம்மையே அழித்துவிடும். விபரீதம் உணர்ந்து பான்பராக்கை மறந்து, பண்போடு இன்புற்று வாழ்வோம் இளைஞர்களே.

Wednesday, August 13, 2008

சுதந்திரமில்லா சுதந்திர தினம்


வீணர்கள் கூட்டம் ஒன்று...

வெடிகுண்டு காட்டி மிரட்டும் செயல் கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

அற்பப் பணத்துக்காக....

சோடைபோன சோம்பேறிகள் நிலை கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பில்...

தமிழகத்தில் சுதந்திர கொண்டாட்டமாம்!

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

மதத்தின் பெயராலே மனித உயிர் பலி கேக்கும்

உன்மத்தர் வெறிச்செயலால்...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

சுதந்திர தினத்துக்கே சுதந்திரமில்லாததை

எண்ணிப் பார்க்கையில்...

வெட்கித் தலை குணிகின்றேன்....

வேதனைப் படுகின்றேன்.

Tuesday, August 12, 2008

படித்ததில் பிடித்தது - நல்லி குப்புசாமி செட்டியார்


நவநாகரிக ஆடைகள் ஏராளமாக வந்தபோதும் பெண்களுக்கு பட்டு ஆடைகளின்மீது உள்ள ஆசை இன்னமும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் ரூபாயில் துவங்கி பல லட்சம் விலையில் பட்டுப் புடவைகள் விற்கப்படுகின்றன். பட்டு விற்பனையில் எத்தனை ஷோரூம்கள் இருந்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்து தமிழகம், இந்தியா என்று மட்டும் இல்லாமல் அயல்நாடுகளிலும் தமது கிளைகளை அமைத்து, பட்டு உலகில் தனி சாம்ராஜ்ஜியம் படைத்ததுதான் நல்லி சில்க்ஸ். பதினேழு இடங்களில் நல்லி சில்க்ஸ் கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளரும், நட்புக்கு இனியவரும், கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவரும், பத்மஸ்ரீ, கலைமாமணி விருது பெற்றவரும், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்விதமாக உதவிகளை செய்பவரும், இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், பல சபாக்களுக்கு தலைவராகவும், பாரதிய வித்யாபவனின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ள நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் எழுத்துலக பிரவேசம் மற்றும் படிப்பதில் அவருக்கு உள்ள ஈடுபாடு பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள அவரை சந்தித்தோம். விற்பனை நேரத்திலும், மும்முரமாக சென்றுகொண்டிருந்த வியாபரத்துக்கு இடையிலும், நமக்காக நேரத்தை ஒதுக்கி, தமது சிறுவயது முதல் துவங்கி இன்றைய நிலைவரை கூறி முடித்தார்.

ஐயா, உங்கள் பள்ளிப் பருவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இன்று பெரிய பெரிய கட்டடங்களும் மக்கள் கூட்டமும், வாகன போக்குவரத்து நெருக்கடிகளும் நிறைந்துள்ள இந்த தியாகராயா நகர் நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எப்படி இருந்தது என்பது இன்றும் என்னால் மறக்க முடியாது. இது ஒரு அழகான கிராமமாக இருந்தது. இப்போது உள்ளதை போல் எங்கு பார்த்தாலும் பள்ளிகள் கிடையாது. இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் ராமகிருஷ்ணா பள்ளி மட்டும்தான் இங்கு இருந்தது. அங்குதான் நான் படித்தேன். பள்ளிப் பாடங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றுவிடுவேன். அப்போது ஆங்கிலத்தில் எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. அதனாலேயே வகுப்பில் இரண்டாவது, மூன்றாவது மாணவனாக ரேங்க் எடுப்பேன். சிறு வயதில் கதைகள், கவிதைகள் படித்ததுண்டா?நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நல்லி சிறிய கடையாக இருந்தது. எனது தந்தையார் வியாபாரத்தை கவனித்து வந்தார். பள்ளி முடிந்ததும் கடைக்கு வந்து விடுவேன். எங்கள் கடைக்கு அருகில்தான் அப்போது தமிழ் பண்ணை புத்தக கடை இருந்தது. அந்தக் கடை வாசலில் கரும்பலகையில், அங்கு விற்கப்படும் புத்தகங்கள் சிலவற்றின் பெயரும் அதில் உள்ள சிறப்பான அம்சங்களும் எழுதி போடுவார்கள்.சிறுவர்களுக்கான புத்தகங்கள் காலணா அரையணாவுக்கு கிடைக்கும். காமிக்ஸ் புத்தகங்களும் அங்கு கிடைக்கும். கடை முடியும் வரை காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி படித்துக் கொண்டிருப்பேன்.

தங்களுக்கு புத்தகங்கள்மீதான ஆர்வம் எப்படி, எப்போதிருந்து வந்தது?புத்தகங்கள்மீதான ஈடுபாட்டை எனக்குள் ஏற்படுத்தியவர் எனது ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் நாராயணன் அய்யர்தான். ‘‘மொழி திறனுக்காகவும், பொது அறிவுக்காகவும், பாட புத்தகங்களோடு நீதி நூல்களையும், பெரியோர்களின் வாழ்க்கை தத்துவங்களையும் நூலகங்களுக்கு சென்று படிக்கவேண்டும்’’ என்று கூறுவார். அவரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அன்றே பள்ளியில் உள்ள நூலகத்துக்கு சென்றேன். அப்போது சிறுவனாக இருந்ததால் நாம் என்ன படிப்பது, எது நமக்கு பிடிக்கும் என்ற குழப்பம் இருந்தது. அங்கிருந்த நூலகர் இரண்டு நூல்களை கொடுத்தார். ஒன்று மகாத்மா காந்தியின் சத்தியசோதனை மற்றொன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள். நான் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவன் என்பதால் சாதாரணமாகவே பரமஹம்சரின் அமுதமொழிகளில் அதிக நாட்டம் இருந்தது. அதேபோல் மகாத்மா காந்தியின் சத்தியசோதனை புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.தேசத்துக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது மகாத்மாவின் சத்தியமும், அகிம்சையும்தான் என்ற கருத்து எனக்கு பிடித்தது.

படிக்கும் ஆர்வத்தினை தொடர்ந்து நீங்கள் அதிகம் விரும்பி படித்த புத்தகங்கள்...?

எனக்கு ஆன்மிக நூல்கள், நீதி நூல்களில் இருந்த நாட்டம் வரலாற்றின் மீதும் ஏற்பட்டது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியர்கள் நாடாள முடிந்தது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகம் குறித்த பல விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பினேன்.உதாரணமாக, இன்று எவ்வளவோ வசதிகள் செல்போன்களாகவும், கம்ப்யூட்டர் இண்டர்நெட்டாகவும் தகவல் பரிமாற்றம் சுலபமாக உள்ளது. ஆனால், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியபோது எந்த வசதிகளுமே இல்லாத சூழலில், எப்படி தொடர்புகளை வைத்து, தகவல்களை பரிமாறி, நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டார்கள் என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது.

நூலகங்களுக்கு சென்றது உண்டா?

1950-களுக்கு முன்பெல்லாம் வரலாற்றுப் பதிவுகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால் மெட்ராஸ் ஆர்க்கிவ்ஸ் கன்னிமாரா, அடையாறு தியசாஃபிகல் லைப்ரரி போன்றவற்றுக்குதான் செல்லவேண்டும். பெரும்பாலும் புத்தகங்களை வாங்க ஹிகின்போதம்ஸுக்குதான் செல்வேன். ஆனால் அங்கும் எனது தேடலுக்கான புத்தகங்கள் சில சமயம் கிடைக்காது. பள்ளி படிப்பு முடிந்ததும் நான் மேற்கொண்டு பி.ஏ. வரலாறு முடித்து பி.எல். படிக்க நினைத்திருந்தேன். நாம் ஒன்று நினைத்தால் நடப்பது ஒன்றாக இருக்கும் என்பார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 1956-ல் எனது தந்தை காலமானதால் மேற்கொண்டு என்னால் படிப்பை தொடரமுடியவில்லை.வியாபாரத்தை நான் கவனிக்கவேண்டியதாயிற்று. கீழே கடையும் மாடியில் வீடும் இருந்தது. கடையை மூடியதும் இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால் நான் மட்டும் தூக்கம் வரும்வரை புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

நீங்கள் படித்தவற்றில் மிகவும் பிடித்தவற்றையும், பிடித்த எழுத்தாளர் பற்றியும் கூறுங்களேன்?

மகாத்மா காந்தியின் சத்தியசோதனை நூலின் ஈர்ப்பினால் நான் மேற்கொள்ள இருந்த சத்தியம், நேர்மையை வியாபாரத்தில் தரம், குறித்த நேரத்துக்கு பணி நிறைவேற்றுதல் என்று பின்பற்றினேன். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் வாரப் பத்திரிகைகள் செய்தித்தாள்களை தவறாமல் படித்துவிடுவேன். ஑எஸ். முத்தையா என்பவர் எழுதிய ஑மெட்ராஸ் ரீ டிஸ்கவர்ட்ஒ என்ற நூல் 1989&ல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் எந்தெந்த நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டன என்ற ஆதாரங்களையும் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அவரை எனது மானசீக குருவாகவே ஏற்றுக்கொண்டேன்.

ஓய்வில்லாத சூழ்நிலையில், புத்தகங்கள் படிக்க நேரம் கிடைக்கிறதா? அரிய நூல்களின் எனது தேடல் இன்றும் தொடர்கின்றது. தினமணி, தினத்தந்தி, தி இந்து பத்திரிகைகளில் வரும் நூல் விமர்சனங்களை தவறாமல் படிப்பேன். அதில் நல்ல தகவல்களுடன்கூடிய புத்தகங்களை வாங்கி எனது நூலகத்தில் சேர்த்து வருகிறேன். எனது லைப்ரரியில் சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கின்றன. அதில் குறைந்தது எட்டாயிரம் புத்தகங்களாவது மறுப்பதிப்பு செய்ய வேண்டியவைகளாக இருக்கும்.

நீங்கள் எழுதிய முதல் நூல் எது?

1983ம் ஆண்டு அருனோதயம் பதிப்பகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பது நூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதில் என்னையும் ஒரு நூல் எழுத சொல்லி கூறினார் அருணன். மூன்று நாட்களே இருந்த நிலையில், 'எனக்கு மேடையில் பேசுவது சிரமமில்லை, ஆனால் எழுத வராதே’ என்றேன். எனது நண்பர் தொலைக்காட்சி நிலைய இயக்குனர் நடராஜன் அவர்களும், அருணனும் ‘நாங்கள் இருக்கிறோம் தைரியமாக எழுதுங்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் உருவானதுதான் எனது முதல் புத்தகமான ‘வியாபாரத்தை பெருக்குவது எப்படி?’ என்ற நூல். 1984-ல் இந்நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து எழுதிய நூல்களில் ‘உறவுகாக்கும் வணிகம்’ என்ற நூலுக்கு 1997-ல் தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. வணிகம், நிர்வாகம், வாழ்வியல் சார்ந்த நூல்கள் இருபதுக்கும் மேல் எழுதியுள்ளேன்.

உங்களின் விருப்பமான நூல்கள் பற்றி...

சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, ஔவையார் ஆத்திச்சூடி, இசை சம்பந்தமான விமர்சனங்கள் போன்றவற்றை விரும்பி படிப்பேன். புத்தக விமர்சனங்களை பார்த்தும், புத்தக கடைகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கினாலும், ஒவ்வொரு முறை சென்னை புத்தக காட்சியின்போதும் ஒரே இடத்தில் பல புத்தக வெளியீட்டாளர்களின் புத்தகங்களை வாங்குவது சுலபமாகவும், வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகவும் இருக்கும். நானும் ஒவ்வொரு முறையும் தவறாமல் புத்தக காட்சியில் புத்தகங்களை வாங்கி வருவதுண்டு. அவற்றை படித்து, பல நேரங்களில் மேடை பேச்சுக்கான குறிப்புகளையும் எடுப்பதுண்டு. அதேபோன்று நானும் ஆர். நடராஜனும் லண்டன் சென்றபோது, பிரிட்டீஷ் லைப்ரரியில் இருந்து இந்தியாவை பற்றிய பழைய வரலாற்று குறிப்புகள் கொண்ட நூல்கள், வணிக நூல்கள் என நிறைய புத்தகங்களை வாங்கி வந்தோம்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ‘நல்லி திசை எட்டும்’ விருது குறித்து கூறுங்கள்?

‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டு இதழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து வெளி வந்துகொண்டுள்ளது. முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு கட்டுரைகள் கதைகள் கொண்ட புத்தகமாக வெளிவருகிறது. அதன் ஆசிரியராக குறிஞ்சி வேலன் என்பவர் இருந்துவருகிறார். அந்தப் பத்திரிகை வெளிவருவதற்கான உதவிகளை வழங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை வழங்கி எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறோம்.எழுத்துலகில் உங்களின் அடுத்த பணிகள் என்னவாக இருக்கும்? பழைய, அரிய நூல்களை மறுபதிப்பு செய்து, பின்வரும் நம் சந்ததியருக்கும் பயனளிக்கும் விதமாக பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் கூட கர்நாடக இசையில் புகழ்வாய்ந்த காஞ்சிபுரம் நைனாப்பிள்ளை பற்றி பி.எம்.சுந்தரம் எழுதிய நூலை மறுபதிப்பு செய்து வெளி இட்டுள்ளோம்.


தன்னை பற்றி, தமது எழுத்துலக பிரவேசம் பற்றி, புத்தகங்களின்மீது தனக்கு உள்ள ஆர்வம் பற்றியெல்லாம் வெளிப்படையாக, உற்சாகமாக தெரிவித்தார் நல்லி குப்புசாமி செட்டியார். பட்டு உலகில் பட்டொளி வீசி பறந்தபோதும், பிரபலமான தொழிலதிபரானபோதும், தன்னடக்கமும், நற்குணங்களும் கொண்ட நல்லி செட்டியார் அவர்களுடனான நேர்காணலை இனிதே முடித்து விடைபெற்றோம்.

Wednesday, July 23, 2008

துணிந்து நில் தோழா

துணிந்து நில் தோழா

உயர்வு உன் கையில்...
இளைஞனே....
தடுக்கும் தடைகற்களை தகர்த்து
மிடுக்கோடு எழுந்திடு
அடுக்கடுக்காய் வெற்றிகள் குவியும்
துணிவோடு முயற்சியை தொடர்ந்திடு
விதியை நோவதை விட்டிடு
மதியை கொஞ்சம் தீட்டிடு
சோம்பலும் சோர்வையும் துரத்திடு
சுகங்களில் நாட்டத்தை மறந்திடு
உழைப்பை உறுதியோடு ஏற்றிடு
வெற்றிக்கொடியை நாட்டிடு
உயர்வு உன் கையில்...
இளைஞனே...
உன்னை உணர்ந்து செயல்படு.

Friday, June 27, 2008

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நம் தேசத்துக்கு உலக நாடுகள் மத்தியில் ஒரு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு. அது எந்த விதத்தில் என்று பார்த்தால் பொருளாதாரம்,விஞ்ஞானம்,ஏற்றுமதி,தொழில் முன்னேற்றம் என்ற பல துறைகளை விடவும் முதன்மையாக நிற்பது கலாச்சாரம். மேலை நாடுகளில் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிமுறைகளுக்கு இடமே கிடையாது. யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற ரீதியில் அவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.சீர்கெட்ட வாழ்க்கை வாழும், குடும்ப அமைப்பு அற்ற மேலை நாட்டினரின் வாழ்க்கை கடிவாளம் இல்லாத குதிரைபோன்றது. ஆனால் நம் நாட்டில் தாய், தந்தை,அண்ணன்,தங்கை,அக்கா,தம்பி என்ற ஒரு பாசப்பிணைப்புடனான வாழ்க்கைமுறை உள்ளது.இதுதான் இன்றளவும் உலக நாடுகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தி, அவர்களின் பார்வைக்கு உயர்வாக நம்மை காட்டுகிறது. அதற்கு அடிப்படை நமது கலாச்சாரம்தான் என்பதில் ஐயமில்லை.ஆங்கிலேயர்களிடம் நாம் பல ஆண்டுகள் அடிமைபட்டுகிடந்தபோது கூட ஏற்படாத கலாச்சார சீரழிவு சமீபத்தில் தொழில் வர்த்தக முன்னேற்றம் என்ற பெயரில் இறக்குமதியான ஐ.டி. என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகளின் வருகையால் வேக வேகமாக விஷம்போல பரவி வருகிறது. ஆங்காங்கே நிகழும் அதிகப்படியான பாலியல் குற்றங்களும்,ஓரினச்சேர்க்கை பிரச்சனைகளும் அதற்கு சான்றுகளாக உள்ளன.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. சாஃட்வேர் இஞ்ஜினியர்களாகி லட்சம் லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஃபாரின் கம்பனிகளின் தாக்கம், கலாச்சாரத்துக்கு ஆணிவேராக இருக்கும் பெண்கள் மத்தியில்தான் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வேலையில் சேரும்போதே முதலில் உடையில் மாற்றங்கள் இருந்தால்தான் வேலையே கிடைக்கும்.நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுகிறார்கள். ஜீன்ஸ் பேண்டும்,டீசர்ட்டும்,ஸ்லீவ்லெஸ் பணியன்களும், அணிந்தால் மட்டுமே ஐ.டி. கம்பெனிகளில் அங்கிகாரம் என்ற நிலை உள்ளது. இதனால் இரண்டு பிள்ளை பெற்ற பெண்ணாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டுடன் ஒரு ஹேண்ட் பேகை மாட்டிக்கொண்டு அலைவது அதிகமாகிவிட்டது.கணவனை ஏமாற்றும் மனைவியும், மனைவியை ஏமாற்றும் கணவனும்,பெண்ணுக்கு பெண்ணே பேராசை பேராசைகொண்டு உறவுகொள்ளும் தகவல்கள் தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தபடி உள்ளன. அதற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும். சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இரண்டு தோழிகள்(கிறிஸ்டி,ருக்மணி&லெஸ்பியன்கள்) தவறான பாலியல் தொடர்பினால் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். இதை நியாயப்படுத்தி மள்ளுகட்டும் ஒரு சிலரின் வாதங்கள் பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தவறான பாலியல் தொடர்புகளால் முதலில் அழியப்போவது குடும்ப அமைப்பு. ஆண்,பெண்ணுக்கு இடையே உள்ள அன்னியோன்யம் அழியும். ஆணுக்கு பெண் அவசியமில்லை,பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை என்ற நிலை உருவாகிடும். கடைசியில் மேலை நாடுகளில் சொல்லப்படுவது போல் குற்றங்களின் எண்ணிக்கை பத்து நிமிடத்துக்கு பாலியல் குற்றங்கள் இத்தனை, கொலை இத்தனை,கொள்ளைகள் இத்தனை,கடத்தல்கள் இத்தனை என்ற நிலை உருவாகிவிடும். ஑இயற்கைக்கு முரணாக உடலுறவு கொள்வது தண்டனைக்குரியதுஒ என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 377&ல் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தையே திருத்தி ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் அளிக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதற்காக பரிந்துபேச,போராட பெங்களூருவில் உள்ளது போன்று சென்னையிலும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ள தகவல் சகித்துக்கொள்ள முடியாதது. இந்த கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்களும்,வழக்கறிஞர்களும்,பத்திரிகையாளர்களும் உள்ளது வேதனைக்குரியதாகும். ஆயிரம் உதாரணங்களை கூறினாலும் முரண் என்ற ஒரு விஷயம் முரண்தான் அதை முறைபடுத்த முணைவது முட்டாள்தனம். அது மீண்டும் நம்மை காட்டுவாசிகளாக்கி கற்காலத்துக்கு அழைத்து சென்றுவிடும்.

Wednesday, June 25, 2008

தினம் தினம் தாமதம்

தினம் தினம் தாமதம்
சிட்டுக் குருவியாய் விடியலில் எழுந்து...
புள்ளி மானாய் துள்ளி குதித்து...
மந்தியாய் தாவி ரயிலை பிடித்து...
அடிமாடாக பேருந்தில் பயணித்து...
வசவுகளை காதிலே வாங்கிக்கொண்டு...
வந்து சேர்ந்தேன் அலுவலகத்தில்.
சொகுசுக் காரில் வந்திறங்கி... கேட்டார் மேலாளர்!
ஏன் தாமதமாய் வருகின்றாய்...?
விக்கித்து நின்றேன் விடை சொல்ல முடியாமல்...
விதியை நொந்துகொண்டு.

Thursday, June 12, 2008

Bus rate

போக்குவரத்து அமைச்சரின் பேத்தல்
சென்னையில் கடந்த மே 28-ந் தேதி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய ஓட்டுநர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை செயலாளர் தலைமை தாங்கினார். விபத்தில்லாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநர்கள் 1100 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ‘‘அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தினமும் சராசரியாக ரூ.91 லட்சம் வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு கோடியே இருபது லட்சம் வசூலாகியிருக்கிறது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினமும் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வசூலாகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஒத்துழைப்பே இந்த வருவாய்க்கு காரணம்’’ என்று பேசியுள்ளார். இது எவ்வளவு பெரிய பேத்தல் என்பதை நிச்சயம் சென்னைவாசிகள் உணர்வார்கள். காலையில் அவசர அவசரமாக கிளம்பி நேரத்திற்கு அலுவலகம் சென்று சேரவேண்டும் என்ற வேகத்தில் ஓடும் நடுத்தர வர்கத்தின் தலையை தடவியதால் கிடைக்கும் வருவாய்தான் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் கிடைக்கும் அதிகப்படியான வருவாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பிழைப்பு தேடி சென்னையில் அடைக்கலம் புகும் நடுத்தர வர்கத்தினர் ஏராளம் ஏராளம். அவர்களின் மாதாந்திர வருமானமும்(4,000 முதல் 5,000 வரை) சொற்பமாகவே இருக்கும். அப்படி இருக்க அலுவலகத்திற்கு தாமதமானால் எங்கே அன்றைய தினம் வீணாகிவிடுமோ என்ற பதட்டத்துடன் ஓடும் மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை காசாக்கும் செயலில்தான் அரசு இறங்கி உள்ளது. ஒரு நாளைக்கு பேருந்து கட்டணத்துக்காக மட்டுமே இருபதில் இருந்து முப்பது ரூபாய் செலவு செய்தால் மாதத்தில் அந்த செலவு மட்டுமே சுமார் 900 ரூபாய் ஆகிவிடும். பஸ் பாஸ் வாங்கலாம் என்றால் அதுவும் மாதத்துக்கு 600 ரூபாய் ஆகின்றது. பத்து பந்தாவான ஏஸி, டீலக்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக சாதாரணமான இருபது பேருந்துகளை விடலாமே. அதனால் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் போகாமல், உயிருக்கும் ஆபத்தில்லாமல்,பாதுகாப்பாகவும்,வசதியாகவும்,நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதனால், மேலும் சில இளைஞர்களுக்கு நடத்துனர் ஓட்டுநர் வேலைகளும் கொடுக்க முடியும். இதைவிட்டு விட்டு டீலக்ஸ், ஏஸி, தாழ்தளபேருந்து என்ற பெயரில் பேருந்தில் ஏறினாலே டிக்கட் ஏழு ரூபாய், பத்து ரூபாய் என்று வசூலித்தால் ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்.தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் ஏஸி பஸ்ஸில் ஏறினாலே இருபத்தைந்து ரூபாய் டிக்கட். ஆனால் அதிகமாக ஓடுவது ஏஸி பஸ்ஸாக உள்ளபோது பிழைப்புக்கே கஷ்டப்படும் மக்கள் அதிகப்படியான கட்டணத்துக்கு என்ன செய்ய முடியும்.கிண்டியில் இருந்து டி.வி.எஸ்வரை டீலக்ஸ் பஸ்ஸில் செல்ல கட்டணம் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் சாதாரண பஸ்ஸில் நான்கு ரூபாய்தான் கட்டணம்.டீலக்ஸ் ஏஸி என்ற பெயரில் இரண்டு மடங்கு,மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை. போகிற போக்கை பார்த்தால் மாநகர பேருந்துகளில் மக்கள்(நடுத்தர, ஏழை எளிய) ஏறவே முடியாது போல் உள்ளதே..! போதாக்குறைக்கு பெட்ரோல் விலைவேறு விஷம்போல் ஏறுகிறது. தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே நிச்சயம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். தி&நகரில் இருந்து அண்ணா நகருக்கு சுமார் இருநூறுக்கும் மேல்பட்ட ஷேர் ஆட்டோ க்கள் ஓடுகின்றன. அனைத்து ஆட்டோ க்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கிறது. அப்படி என்றால் பேருந்துகளின் பற்றாக்குறை,நேரத்துக்கு பேருந்துகள் கிடைக்காதது போன்ற காரணங்களால்தான் மக்கள் ஷேர் ஆட்டோ க்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை சென்னை முழுதுமே பரவலாக உள்ளது. அரசு பரிசீலணை செய்து மக்களின் தேவைகளை உணர்ந்து உண்மையான அக்கரையோடு செயல்பட்டால் நடுத்தர வர்கத்தின் தலையை தடவி அந்த வருமானத்தை காட்டி பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

Book stall-T-NAGAR

கொட்டிக் கிடக்குது புத்தகப் பூக்கள்
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி எங்கோ ஒரு சில வீடுகளில் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தினாலும் விஞ்ஞான வளர்ச்சியினாலும் படிப்படியாக மாறி இன்று கலர் டி.வி. இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியும் அதேபோன்ற நிலையை ஒரளவு அடைந்துவிட்ட சூழ்நிலையில், கட்டுரைகள் எழுதவோ, கடிதம் எழுதவோகூட அதிகம்பேர் பேனாவை எடுப்பதில்லை.அதேபோல் உலக விஷயங்களை அறிந்துகொள்ளவும்கூட கணினி யுகத்தில் இணையதளங்கள் உதவுகின்றன. இணையதளங்களில் இல்லாத தகவல்களே இல்லை. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை விடுதிகளாகவும், டி.வி.டி.களாகவும்,கை அடக்க செல்போனின் ப்ளூடூத்களாகவும் உருவெடுத்துவிட்ட சூழ்நிலையில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை எப்படி உள்ளது, புத்தகப்பிரியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளோடு பிக் பஜார் என்று சொல்வார்களே அதுபோன்று சென்னைவாசிகளுக்கு விற்பனை மையங்கள் உள்ள இடங்களில் ஒன்றான தி.நகர் பாண்டிபஜார் நெடுகிலும் நடைபாதை கடைகளோடு உள்ள ஒரு சில புத்தகக் கடைகளை அனுகினோம். கடை இருப்பது நடைபாதை என்றாலும் அங்கே விற்கப்படுபவை பெரிய பெரிய படிப்பாளிகளையும், படைப்பாளர்களையும் ஈர்க்கும் புத்தகங்கள். இங்கே பழைய புத்தகங்கள் பாதி விலைக்கு கிடைக்கின்றன. ஒரு சில கடைகளில் புதிதாக வெளியிடப்படும் பதிப்பகங்களின் புதிய புத்தகங்களும் விற்கப்படுகின்றன. பாண்டிபஜார் பகுதியில் இப்படிப்பட்ட கடைகள் சுமார் ஏழெட்டு கடைகள்வரை உள்ளன. அவற்றுள் ஒரு புத்தகக் கடை உரிமையாளர் அருள்நாதன் என்பவரிடம் பேசும்போது ஑஑கடந்த பத்து வருடங்களாக இதே பகுதியில் ஒரு விற்பனை வளாகத்தில் புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறேன். பிளாட்பாரக் கடையை ஐந்து வருடமாக நடத்தி வருகிறேன். இங்கு அதிகமாக விற்பனை ஆவது ஆங்கில நாவல்கள், அடுத்ததாக தொழில் முதலீட்டு புத்தகங்களும், சமையல் குறிப்புகள், அழகு கலை குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனை ஆகின்றன. சுமார் இருபது பதிப்பகங்களின் வெளியீட்டில் வந்துள்ள புத்தகங்களை விற்பனை செய்கிறோம். அவற்றுள் விகடன் பதிப்பகத்தின் புத்தகங்களும் உள்ளன. விகடன் பிரசுரத்திற்காகவே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்களும் சில புத்தகங்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைபடு,மதனின் வந்தார்கள் வென்றார்கள் போன்ற புத்தகங்களும்.பெண்களுக்கான பழகிய பொருள் அழகிய முகம் போன்ற அழகு குறிப்பு புத்தகங்களும் வாசகர்கள் வாங்கிச்செல்கின்றனர்ஒஒ என்றார். அதே பகுதியில் உள்ள வேறொரு புத்தகக் கடை விற்பனையாளரான செல்வம் கூறும்போது ஑஑ஆங்கில நாவல்களில் சிட்னி ஷெல்டன் நாவல்களும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் நாவல்களும், தமிழில் கல்கி சாண்டில்யன் கதைகளும் அதிக விற்பனை ஆகும். ரமணிச்சந்திரனின் புத்தகங்களை பெண்கள் விரும்பி கேட்டு வாங்கிச்செல்வதுண்டு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை கேட்டு வரும் வாசகர்களும் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான புத்தகங்களில் தென்னாலி ராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனஒஒ என்றார். இந்தப் பகுதியில் புத்தகங்களை வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் அனைவருமே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை புத்தகக் கடைகளை நடத்தி வருகின்றனர். விற்பனையை பொருத்தமட்டில் அன்றும் இன்றும் ஒரே நிலை உள்ளது அதில் சரிவு ஏதும் இல்லை என்கிறார்கள். நாவல்களையும், கட்டுரை நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கிச் செல்லும் தொடர்ந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஒரு கடையில் இல்லாவிட்டாலும் வேறு கடை ஏதாவது ஒன்றில் வாசகர்கள் கேட்டு வரும் புத்தகங்கள் கிடைத்துவிடும். சில நேரங்களில் நாங்களேகூட நன்றாக பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, கிடைக்காத புத்தகங்களை வேறு எங்காவது கேட்டு வாங்கித் தருவதும் உண்டு என்கிறார்கள். ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்கள் தங்கள் புத்தகக் கடைக்கு வந்து செல்வதாக சொல்கிறார்கள். இதே பகுதியில் அப்துல்லா என்பவர் ஒரு புத்தகக் கடை நடத்தி வருகிறார். ஑஑எனது தந்தை சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு புத்தகக் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். அப்போதெல்லாம் மூன்று அல்லது நான்கு கடைகள்தான் இருந்தன ஐந்து வருடங்களுக்கு முன்புதான் மேலும் சில கடைகள் பெருகிவிட்டன. இருந்தாலும் பெரிய அளவில் எங்கள் விற்பனையில் பாதிப்புகள் இல்லை. பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் சேகுவேரா, ஸ்டாலின், ஹிட்லர் போன்ற தலைவர்கள் புத்தகங்களையும் ஸ்டெஃபன் ஆர் கோவே என்ற ஆங்கில எழுத்தாளரின் செவன்த் ஹாபிட்ஸ், எய்த் ஹாபிட்ஸ் போன்ற நாவல்களையும் அதிகமாக வாங்கிச் செல்வார்கள். மல்லிகா பத்ரிநாத், தாமோதரன் ஆகியோர் எழுதிய சமையல் குறிப்புகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா புக் ஹவுஸ் வெளியீடான டிங்கிள் என்ற சிறுவருக்கான ஆங்கில கதை புத்தகம் இல்லாத கடைகளே இருக்காதுஒஒ என்றார். வீட்டுக்குள்ளேயே உலகை அழைத்துவரும் கணினியும் இணையதளங்களும் எண்ணற்றவையாக இருந்தாலும், புத்தக பிரியர்களின் தேவையும் அறிவுப்பசிக்கான, பொழுதுபோக்குக்கான தேடல்களும் பூர்த்தியாகும் இடமாக, நல்ல நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும்,பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட புத்தகங்களை நமக்கு கிடைக்கச் செய்யும் இடமாகவும், சிலரின் வாழ்வாதாரமாகவும் பாண்டிபஜாரின் நடைபாதை கடைகள் விளங்குகின்றன.

Wednesday, March 26, 2008

vinayagar thuthi

விநாயகர் துதி
திகடச்சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகடச்சக்கரத் தாமரை நாயகன்
அகடச்சக்கர வின்மணியாவுறை
விகடச்சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.